top of page

எங்கள் முதற்திரைப்படம் பிறந்த கதை 

பிரனிதி மற்றும் குடும்பத்தினருடனான எனது முதல் சந்திப்பு மறக்க முடியாதது.  பிரனிதிக்குச் சிறந்த குரல் வளம் இருப்பதாக உலகம் அறிந்திருந்தபோது இளம் வயதில் அவர் YouTube இல் பாடல்களைப் பாடுவதைப் பார்க்கையில் அவரது உணர்வாளும் திறமையையையும் என்னால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை.

​​

பலவிதமான உணர்ச்சிகளை சிரமமின்றித் தனக்குள்ளிருந்து கொண்டு வரும் பிரனிதியின் அசாதாரணத் திறனை ஒவ்வொரு வீடியோவைப் பார்க்கும் போதும் உணர்ந்தேன்.  அந்தத் தருணங்களில், நான் ஒரு பாடகியை மட்டுமல்ல! பார்க்கும், தன் குரல் கேட்கும் யாரையும், அன்பு கலந்த உற்சாகத்தால் கட்டிப் போடும் திறன் கொண்ட ஒரு சகலகலா வல்லியைப் பார்த்தேன்.

வீட்டில் காலடி எடுத்து வைத்ததும், பிரனிதியின் அம்மாவும் அப்பாவும் என்னை அன்புடன் வரவேற்றனர். என்னைப் பார்த்ததும் கண்களில் பிரகாசத்துடன், "மாமா! நான் உங்களுக்காக இந்தப் பாடலை பியானோவில் வாசிக்கப் போகிறேன்" என்றார், பிரனிதி.

பியானோவில் அமர்ந்த பிரனிதியின் விரல்கள் நடனமிட, அவர் அப்பா, "இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவள் பியானோவைத் தொடுகிறாள்,"  என்று சொல்ல, அந்தத் தருணத்தில், நான் ஒரு திறமையான கலைஞரின் ரசிகன் என்ற நிலை தாண்டி, மனதின் எல்லைகளைத் தாண்டிய எங்கள் இரு இதயங்களின் இணைப்பைக் கண்டேன் - பகிர்ந்து கொள்ளப்பட்ட மகிழ்ச்சி மற்றும் பாசத்தின் மொழியில் மெளனமாக உருவான இணைப்பே அது.

​​​

முதலில் - பிரனிதி நான் எழுதிய பாடலைத் தன் குரலால் உயிர்ப்பிக்க வேண்டும் என்ற மறக்க முடியாத மகிழ்ச்சியாக இருந்த, ஆங்கிலத்தில் நான் எழுதிய பாடலின் பதிவுடன் எங்கள் படைப்புப் பயணம் தொடங்கியது. 4 கோடி தடவை பார்க்கப்பட்ட பிரனிதியின் "கண்ணான கண்ணே" விஸ்வாசம் படப் பாடலைப்  பிரனிதி YOUTUBE இல் பாடியது நான் சிந்தித்துக் கொண்டிருந்த 'தந்தை-மகள்' அன்பையே படமாக்கலாம் என்று என் முடிவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது.  ஒரு மகளுக்கும் அவளுடைய தந்தைக்கும் இடையில் பகிர்ந்து கொள்ளப்பட்ட மென்மையான அன்பு, காதல், குடும்ப உறவுகள் மற்றும் மனித உறவுகளில் மன வேறுபாடுகள், அதனால் வரும் சோதனைகள், சோதனைகளை வெல்லப் போட்டி போடும் அப்பா, மகள் என,  காட்சிக்கு காட்சி வேகமாக நகரும் திரைப் படமாக மலர்ந்துள்ளது நமது படம்.

PXL_20221201_061901601_Original (1)_edited.jpg

திறமையான படைப்பாளர்களின் முயற்சியில் இந்தத் தந்தையும் மகளும் உங்களைகே காண வருகிறோம். 

  • சம்பத் கிருஷ்ணா, இதற்கு முன் இயக்குனர் பாலாவிடம் "பிதாமகன்" படத்தில் உதவி இயக்குனாராகப் பணி புரிந்திருக்கிறார். அவரது எளிய இனிய கதையை அவரும் நானும் இயக்கியுள்ளோம்.

  • "இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!" மற்றும் "காஷ்மோரா" படங்களில் உதவி இயக்குநராகப் பணி புரிந்த பிரசாந்த் திரைக் கதையை வடிவமைத்தும் மற்றும்  திரைப்படத்தின் அனைத்துத் துறைகளிலும்  இன்றியமையாத மேற்பார்வையும் அளித்து வருகிறார்.

  • நடிப்பு, பாடல், எடிட்டிங், உதவி இயக்கம் எனப் பல்துறை திறமை கொண்ட அபிஷேக் ரமேஷ் எங்கள் அணியின் அடித்தளம். 

  • சர்வதேசத் திரைப்பட விழாவில் விருதுபெற்ற  சினிமாடோகிராஃபர் சாம் கே. ரொனால்ட் மற்றும் பாரத் சிங்கம் சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். 

  • உதவி இயக்குநரும் திறமையான வடிவமைப்பாளருமான தமிழ்ச்செல்வன், தனது படைப்பாற்றலால் அணிக்கு புதிய வண்ணத்தைச்  சேர்க்கிறார்.

  • அருண் விஜய், நடிகராகவும் உதவி இயக்குநராகவும் பணியாற்றியதோடு, கதாப்பாத்திரத் தேர்வில் முக்கியப் பங்காற்றினார், பவின்  அவருக்குத் துணை புரிந்தார்.

  • பிரனிதியின் தந்தை பிரவீன்  மார்க்கெட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷனில் ஒரு முக்கியப்  பங்காற்றி வருகிறார். பிரனிதியின் அன்னை பிரியா அவர்கள் ஒவ்வொரு பாடலும் மெருகேறுவதற்கும் பிரனிதியின் சிறப்பான நடிப்பிற்கும் உறுதுணையாக இருந்து வருகிறார். 

 

பல்வேறு திறமையான ஆளுமைகள் நம் அணியில்  உள்ளனர், அவர்களைப்பற்றியும் இங்கு எழுதுவேன். 

PXL_20230916_120138568_edited.jpg

படப்பிடிப்புக் கால  நாட்கள் பிரனிதியின் தூய அன்பால் நிரப்பப்பட்டன. இந்த நேரத்தில், நான் சிலம்பத்தைக் கற்றுக்கொண்டு பிரனிதிக்கு  எனது அமெச்சூர் திறன்களைப் பகிர்ந்துகொண்டேன். பிரனிதி எளிதில் கற்றுக் கொண்டார். எந்தக் காட்சியாயிருந்தாலும் உணர்வுகளை, உடனடியாக, மிக ஆழமாகக் கொண்டு வந்தார் பிரனிதி. எனது மகள் படப்பிடிப்பு நாட்களில் வீட்டிலும் நான் வெளியூரிலும் இருந்தது,  ஏக்கத்தை ஏற்படுத்தியது. அதை இன்னொரு அன்பு மகள் பிரனிதி போக்கினார் என்றே நான் சொல்ல வேண்டும். 

படத்தில், நடிப்புத் திறமை மட்டும் அல்லாமல் இரண்டு பாடல்களுக்கு தனது அழகான குரலையும் வழங்கியுள்ளார், பிரனிதி.​​ சீதா என்னும் பிரனிதியின் கதாப்பாத்திரத்தை மையப்படுத்தி "சீதாவின் பிறப்பு, சீதாவின் அன்பு, சீதாவின் சோதனை, மற்றும் சீதாவின் பக்தி" என பாடல்கள் அமைத்துள்ளோம்.

பிரனிதி எனக்கு இன்னொரு மகளாக வாழ்க்கையில் இருப்பது, அல்லது  நாங்கள் சினிமா - பாடல் மூலம் மட்டும் பழகும் சக கலைஞர்களாக இருப்பது - இவை இரண்டில் ஒன்று மட்டுமே நான் தேர்ந்தெடுக்க முடியும் என்றால் நான் இந்தத் தெய்வக் குழந்தை எனக்கு மகளாக இருப்பதையே கண்ணிமைக்கும் நேரத்தில் தேர்ந்தெடுப்பேன்.

 

நல்ல வேளை - அந்தச் சோதனை இன்றில்லை. இந்தக் குழந்தை போல் இன்னும் பல பெறாத குழந்தைகளை நான் இதயத்தில் ஏந்தும்  வாய்ப்புகளுடன், நாங்கள் இருவரும், மென் மேலும் பல திரைப்படங்கள், பாடல்கள் உருவாக்கும்படி அமைய நீங்களும் அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொண்டால், அதுவே எனக்கு அளப்பரிய பரிசாகும். - சிட்டிசன் கே கே 

IMG_0819_edited_edited_edited.jpg

Copyright © Feel Good Films. All rights reserved.

bottom of page